வாட்டி வதைக்கும் கோடை வெயில்… கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் -ஜில்லென்ற அருவியில் குளித்து மகிழ்ச்சி..!

பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட பல பிரச்சனைகளால் பருவ காலங்களும் மாறி வருகின்றன. தமிழகத்தில் கோடை காலம் என்பது இரு மாதங்களுக்கு முன்னதாகவே துவங்கி விட்ட நிலையில் மாநிலம் முழுவதும் கடும் கோடை வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலில் இருந்து தப்பித்து கொள்ளவும் குளுமையை அனுபவிக்கவும் சூழல் சுற்றுலா தளங்கள் மற்றும் நீர் வீழ்ச்சிகளுக்கு அதிகளவில் மக்கள் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக கோவையிலுள்ள சூழல் சுற்றுலா தளமான கோவை குற்றால அருவிக்கு கோவை மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் குற்றால அருவியில் குளித்து மகிழ்கின்றனர். கோடை காலம் துவக்கம் மற்றும் மழையின்மை காரணமாக குற்றால அருவியில் நீர் வரத்து குறைந்து உள்ள நிலையிலும் கோடை வெப்பத்தை தனிக்க அதிக அளவிலான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும் அருவியில் குளிக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி 20 க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.