கோவையில் கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை- முதியவர் உள்பட 4 பேர் கைது..!

கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் மற்றும் வெளிமாநில லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார்,செல்வராஜ் மற்றும் போலீசார் கரியாம் பாளையம்,வடக்கலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கிருஷ்ணகவுண்டன் புதூர், எல்லப் பாளையம்,வடக்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றதாக ராஜேந்திரன் (வயது 53), பத்ரன் (72), ஈஸ்வரன்(54) உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 3 பேரும் தடை செய்யப்பட்ட ஆன்லைன் மற்றும் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது.இதனையடுத்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள்,பில் புத்தகங்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.8890-யையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று அன்னூரை அடுத்துள்ள பொன்னேகவுண்டன்புதூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது,அப்பகுதியில் பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் அவர் கோவை சென்னப்பசெட்டிப்புதூர் பகுதியை சேர்ந்த நவீன்குமார்(18) என்பதும், அவர் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவினை பறிமுதல் செய்தனர்.