கூலித் தொழிலாளி பேங்க் அக்கவுண்டில் திடீரென வந்த ரூ.100 கோடி… ஆச்சரியத்தில் ஆழ்ந்த கிராம மக்கள் .!!

மேற்கு வங்கத்தில் தினக்கூலியாக வேலை செய்து வாழ்ந்து வந்தவர் வங்கி கணக்கில் ரூ.100 கோடி பணம் டெபாசிட் ஆன சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏழை எளியோர் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் நிலையில் சில சமயம் சில பண பரிவர்த்தனைகள் தவறுதலாக வேறு வங்கி கணக்கில் செலுத்தப்படுவது அடிக்கடி நடக்கிறது. சில சமயம் சிலரது வங்கி கணக்கில் லட்சங்களில் பணம் டெபாசிட் ஆகும்போது அது பிரதமர் வங்கி கணக்கில் அளித்த பணம் என்று எண்ணி பலரும் செலவு செய்து விடும் சம்பவங்களும் நடக்கின்றன. அப்படியாக ஒரு ஏழை கூலித்தொழிலாளி கணக்கில் ரூ.100 கோடி பணம் டெபாசிட் ஆகியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் உள்ள பாசுதேப்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முகமது நசிருல்லா மண்டல். கூலித்தொழிலாளியான இவர் தினசரி கிடைக்கும் வருமானத்தை கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். வங்கியில் கணக்கு இருந்தாலும் அதில் இருந்த தொகை வெறும் ரூ.17 மட்டுமே.

இந்நிலையில் ஒருநாள் திடீரென அவரது வீட்டிற்கு வந்த சைபர் செல் துறையினர் அவரது வங்கி கணக்கில் ரூ.100 கோடி இருப்பதாகவும், அது எப்படி கிடைத்தது என அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறி வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதுடன், மே 30ம் தேதிக்குள் நேரில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டுள்ளனர். மேலும் அவரது வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள முகமது நசிருல்லா மண்டல் “காவல்துறையினர் அழைத்ததும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு தூக்கமே வரவில்லை. நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை. எனது வங்கி கணக்கில் ரூ.100 கோடி இருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை” என்று கூறியுள்ளார். கூலித்தொழிலாளி வங்கி கணக்கில் ரூ.100 கோடி இருப்பது அக்கிராமத்தினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.