ஒரு வாரத்தில் உக்ரைன்- ரஷ்யா இடையில் போர் மூளும் அபாயம்: பதற்றத்தில் இருக்கும் உலக நாடுகள்..!

ரஷ்ய படைகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் உக்ரைனை தாக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

உக்ரைன் – ரஷ்யா மோதல் விவகாரம் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில் வாஷிங்டனில் அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுல்லிவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சுல்லிவன், உக்ரைனுக்குள் படைகளை அனுப்பும் முடிவை ரஷ்ய அதிபர் புடின் எடுத்துவிட்டாரா என்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் ஆனால் வரும் 20ஆம் தேதிக்குள் தாக்குதல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருவதாக உளவுத்தகவல்கள் வந்துள்ளதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உக்ரைனை ரஷ்யா தாக்கினால் அதற்கு தங்கள் படைகள் பதிலடி கொடுக்கும் என சுல்லிவன் தெரிவித்தார். ஆனால் ரஷ்யாவை தாக்குவது தங்கள் நோக்கமல்ல என்றும் நேட்டோ நாடுகளை தற்காப்பதே தங்கள் படைகளின் பிரதான நோக்கமாக இருக்கும் என்றும் சுல்லிவன் விளக்கினார். போர் அபாயம் உள்ளதால் உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேறுமாறும் சுல்லிவன் கேட்டுக்கொண்டார். உக்ரைனில் உள்ள தங்கள் குடிமக்கள் உடனடியாக நாடு திரும்புமாறு ஜப்பான், லாட்வியா, நெதர்லாந்து, நார்வோ ஆகிய நாடுகளும் தெரிவித்துள்ளன. உக்ரைனில் உள்ள தனது தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகளை வெளியேற்றும் பணியை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. இதற்கிடையே போரை தவிர்க்கும் இறுதி முயற்சியாக ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் பைடன் தொலைபேசியில் இன்று பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைனை நேட்டோ எனப்படும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டணியில் இணைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது, இதை உக்ரைனும் விரும்புகிறது. ஆனால் தங்கள் அண்டை நாடு அமெரிக்கா தலைமையிலான ராணுவ கூட்டணியில் இணைவதை ரஷ்யா விரும்பவில்லை. இதையடுத்து உக்ரைன் மீது போர் தொடுப்பதற்காக தங்கள் எல்லையில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் வீரர்களை ஒரு மாதத்திற்குமேலாக ரஷ்யா நிறுத்திவைத்துள்ளது. அமெரிக்காவும் போலந்து, ருமேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தனது படையை குவித்துள்ளது.