இருசக்கர வாகன திருடர்கள் கைது: 25 வாகனங்கள் பறிமுதல்…

சென்னை திருமங்கலம் மற்றும் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடிய 2 நபர்களை போலீசார் கைது செய்தனர். 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை, கொளுத்துவாஞ்சேரி, பாரதி தெருவில் வசித்து வரும் கோகுல், 25 என்பவர் கடந்த 07.12.2023 அன்று இரவு, திருமங்கலம் சாந்தம் காலனி, 14வது தெருவில் உள்ள அவரது சகோதரர் வீட்டிற்கு சென்று அவரது பல்சர் இருசக்கர வாகனத்தை அங்கு நிறுத்திவிட்டு, மறுநாள் (08.12.2023) காலை பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து கோகுல் திருமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

திருமங்கலம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் தீவிர விசாரணை செய்தும், அப்பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், மேற்படி இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற கொடுங்கையூரைச் சேர்ந்த கலிமுல்லா (19), தஞ்சாவூரைச் சேர்ந்த ஹரிஹரன், 24 ஆகிய இருவரை கைது செய்தனர்.

இருவரும், சென்னையில், திருமங்கலம் மற்றும் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடிச் சென்று தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. அதன்பேரில், மேற்படி எதிரிகளிடமிருந்து புகார்தாரரின் பல்சர் இருசக்கர வாகனம் உட்பட 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் எதிரி கலிமுல்லா மீது ஏற்கனவே 1 திருட்டு வழக்கு உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரிகள் கலிமுல்லா மற்றும் ஹரிஹரன் ஆகியோர் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.