திருச்சி மாவட்ட காங்கிரஸில் திருநாவுக்கரசருக்கு எதிராக தீர்மானம்.!!

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட திருநாவுக்கரசர் எம்பி முயற்சித்து வரும் வேளையில் திருச்சி முன்னாள் எம்பியான மறைந்த அடைக்கலராஜின் மகன் லூயிஸும் திருச்சி சீட்டுக்கு முயற்சித்து வருகிறார். இதை அறிந்த திருநாவுக்கரசர் அடைக்கலராஜ் மகன் லூயிஸ் ஆதரவாளர்கள் பலரையும் மாவட்ட காங்கிரசில் அவர்கள் வகித்து வந்த பதவிகளில் இருந்து நீக்கி வருகிறார்.
மாவட்ட தலைவர் ஜவஹர், கோட்ட தலைவர்கள் சிவாஜி சண்முகம், உறையூர் ராஜ் மோகன், மலைக்கோட்டை ரவி, பாலக்கரை ஜெரால்டு, பொன்மலை செல்வகுமார் என வரிசையாக அடைக்கலராஜ் ஆதரவாளர்கள் திருநாவுக்கரசரால் நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் திருநாவுக்கரசருக்கு எதிராகத் திரண்டுள்ள லூயிஸ் அடைக்கலராஜின் ஆதரவாளர்கள் காமராஜ் பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். காமராஜர் பேரவை சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அதில் திருநாவுக்கரசரால் நீக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அவர்கள் காங்கிரசில் வகித்த பதவிகள் வழங்கப்பட்டு, அவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அதாவது மீண்டும் காங்கிரஸ் லூயிஸ் வசம் வந்தால் இவர்கள் அனைவரும் அப்படியே காங்கிரஸ் நிர்வாகிகள் ஆவார்கள் என்பதுதான் இதற்கு அர்த்தம்.
இன்னும் சில நாட்களில் திருநாவுக்கரசருக்கு எதிராக திருச்சி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி, ‘மக்களவைத் தேர்தலில் லூயிஸ் அடைக்கலராஜுக்கு சீட் வழங்க வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றி அதை ராகுல் காந்தியிடம் கொடுக்க தயாராகி வருகிறார்கள்.
திருச்சி காங்கிரஸில் நடக்கும் இந்த கோஷ்டிப் பூசல் அமர்க்களங்களை அமைச்சர் நேரு தொடர்ந்து கவனித்து வருகிறார். இந்தியா முழுவதும் காங்கிரஸில் கோஷ்டிகள் அதிகரித்து வருகின்றன. இது  இப்படியே போனால் காங்கிரஸ் முற்றிலும் அழிந்து விடும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் வேதனை தெரிவித்தனர்.