இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட 11 கிலோ தங்கம் மீட்பு..!

ராமேசுவரம்: இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட 11 கிலோ 600 கிராம் தங்கத்தை கடலோரக் காவல் படை நீச்சல் வீரர்கள் மீட்டனர்.

மற்றொரு படகில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ 270 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மொத்தம் 5 பேரை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்தனர்.

இலங்கையிலிருந்து 2 படகுகள் மூலம் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலோரக் காவல் படைக்கு சொந்தமான ரோந்து படகில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கடந்த 30-ம் தேதி பிற்பகல் மண்டபம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து சென்றனர்.

அவ்வழியாக பதிவு எண் இல்லாமல் வந்த பைபர் படகை விரட்டிபிடித்தனர். படகிலிருந்த வேதாளை தெற்கு தெருவைச் சேர்ந்த முகமது நாசர் (35), அப்துல் ஹமீது (33), தங்கச்சிமடம் வலசை தெருவைச் சேர்ந்த ரவிக்குமார் (46) ஆகியோரை மண்டபம் கடலோரக் காவல்படை முகாமுக்கு அழைத்துசென்று மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மூவரும் இலங்கையிலிருந்து தங்கத்தை கடத்திக் கொண்டு வந்ததாகவும், அந்த பார்சலை மண்டபம் அருகே உள்ள மணலி தீவு கடலில் போட்டுவிட்டதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து கடலோரக் காவல் படையின் நீச்சல் பிரிவு வீரர்கள் கடலில் தங்கத்தை தேடி வந்தனர். அந்த பார்சலில் இருந்த 11 கிலோ 600 கிராம் தங்கத்தை கடலோரக் காவல்படையின் நீச்சல் பிரிவு வீரர்கள் நேற்று மீட்டனர்.

 இதற்கிடையே நேற்று முன்தினம் மண்டபம் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதி வேதாளையில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர், மற்றொரு சந்தேகத்துக்குரிய படகிலிருந்து 21 கிலோ 270 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். படகிலிருந்த வேதாளை தெற்குத் தெருவைச் சேர்ந்த சாதிக் அலி (32), முகம்மது அசார் (30) ஆகியோரை கைது செய்தனர்.

மொத்தம் 5 பேரை கைது செய்துள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் இந்த கடத்தலில் தொடர்புடைய மற்றவர்களின் விவரங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட 32 கிலோ 870 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.20.20 கோடி என கடலோர காவல்படையினர் தெரிவித்தனர்.