குடியரசு தின விழா: சென்னை மெரினாவில் தேசிய கொடியேற்றினார் கவர்னர் ஆர்.என்.ரவி..!

சென்னை மெரினாவில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 74-வது குடியரசு தின விழா நேற்று  கோலாகலமாக கொண்டாடபட்டது  சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் குடியரசு தின விழா நடைபெறுவது வழக்கம். தற்போது அந்த இடத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு தமிழக கவர்னர் மற்றும் முதல்வர் கலந்து கொள்ளும் குடியரசு தின விழா, மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்றது

இதையொட்டி, நேற்று காலை 7.52 மணிக்கு விழா பகுதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அவரின் காரின் முன்னும் பின்னும் போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டார். காலை 7.54 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். அதைத் தொடர்ந்து 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி வரவேற்றார். பின்னர் அதிகாரிகளை கவர்னருக்கு சம்பிரதாயப்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

இதையடுத்து, காலை 8 மணிக்கு அங்குள்ள கம்பத்தில் தேசிய கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்தார். அப்போது அந்த பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவியது. தொடர்ந்து ராணுவ படை பிரிவு, கடற்படை பிரிவு, ராணுவ கூட்டுக்குழல் முரசிசை பிரிவு, வான்படை பிரிவினர் அணிவகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செலுத்தினர்.