இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு : குற்றவாளிக்கு 16 ஆண்டு சிறை தண்டனை – கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது இளம்பெண். இவர் கோவையில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவருக்கு ஒண்டிப்புதூரைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் அறிமுகமானார். அவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் தொகை வாங்கித் தருவதாக கூறினார். மேலும் அவர் நடத்தையில் சந்தேகம் அடைந்த அந்த பெண் அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். இதை தொடர்ந்து அந்த இளம் பெண் செல்போனுக்கு குறுஞ் செய்திகள் அனுப்பி தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு சுமார் இரவு 11.00 மணிக்கு அந்த இளம் பெண் மட்டும் விடுதியில் தங்கி இருந்ததை அறிந்து அங்கு சென்ற அவர் அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இது குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து சென்று உள்ளார். இதனால் அந்த பெண் ஒரு மாதம் கடந்த நிலையில் அவரது தாய் மாமாவிடம் இதுகுறித்து தெரிவித்து உள்ளார். இருவரும் இது குறித்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் ஒண்டிப்புதரைச் சேர்ந்த பரமசிவத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பரமசிவம் என்பவருக்கு 16 ஆண்டு சிறை தண்டனையும் 1000 ரூபாய் அபராதம் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.