இலங்கையின் 8-வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க.. மீண்டும் வெடித்தது போராட்டம்..!

இலங்கையின் புதிய அதிபராக ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார்.

இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி அந்நாட்டு கடந்த சில மாதங்களாகவே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். எனினும் அதிபர் கோட்டபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என்று போராடங்கள் மீண்டும் வலுப்பெற்றன. இதையடுத்து தனது அதிகாரப்பூர்வ அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடிய கோட்டபய முதலில் மாலத்தீவுக்கு சென்றார். ஆனால் அங்கும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பின்னர் சிங்கப்பூர் சென்றார். இதனிடையே சிங்கப்பூரில் உள்ள கோட்டபய, ராஜபக்ச ராஜினாமா செய்ததாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் இலங்கை புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்ரம சிங்க, டலஸ் அழகப்பெரும, அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த ரகசிய வாக்கெடுப்பில் மொத்தம் உள்ள 225 எம்.பிக்களில் 2 பேர் ரகசிய வாக்கெடுப்பை புறக்கணித்த நிலையில் 223 எம்.பிக்கள் வாக்களித்தனர். இந்த வாக்கு எண்ணிக்கையில் டலஸ் அழகப்பெருமவுக்கு 82 ஓட்டுகளே கிடைத்துள்ளது. 4 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.

குறைந்தது 113 எம்.பிக்களின் ஆதரவை பெறுபவர் அதிபராக முடியும். அதன்படி ரகசிய வாக்கெடுப்பில் ரணிலுக்கு 134 எம்.பிக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இதன் மூலம் இலங்கையின் புதிய அதிபராக ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கை நாட்டின் 8-வது அதிபராக ரணில் விக்ரம சிங்க இன்று பதவியேற்றுக் கொண்டார். இலங்கையின் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா முன்னிலையில் நாடாளுமன்றத்தில் ரணில் பதவியேற்றுக் கொண்டார். பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பிரதமராகவும், இடைக்கால அதிபராகவும் இருந்த ரணில் தற்போது அதிபராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

கோட்டபயவின் பதவிக்காலம் முடியும் 2024 வரை அதிபர் பதவியில் ரணில் இருப்பார்.. எனினும் அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வான நிலையில் இலங்கையில் மீண்டும் போராட்டம் தொடங்கியது. இலங்கை அதிபர் செயலகம் முன்பு போராட்டக்காரர்கள் மீண்டும் திரண்டுள்ளனர். ரணில் பதவி விலக வேண்டும் என்று அதிபர் செயலகத்திற்கு முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் .இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.