மீண்டும் உயருகிறது சொத்து வரி… பொதுமக்கள் அதிர்ச்சி..!

சொத்து வரி உயர்த்தப்பட்டால் வீட்டு வாடகை உயர வாய்ப்பு..

தமிழகத்தில் 20 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் தற்பொழுது இருந்து வரும் நிலையில் கடந்த 1998-ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்ட பின்னர் கடந்த ஆண்டு ஏற்பட்ட விலைவாசி உயர்வு, பணியாளர்களின் ஊதிய உயர்வு, பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை தேவை மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி பராமரிப்பு செய்தல் போன்றவற்றுக்கு தேவைப்படும் கூடுதல் செலவினம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த ஆண்டு 25, 50, 75 மற்றும் 100 என்ற சதவீதபடி தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. காலிமனை வரி மட்டும் 100 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில் ஒவ்வொரு ஆண்டும் 6% சொத்து வரி உயர்த்தப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் ஏப்ரல் முதல் தற்போது செலுத்தப்படும் சொத்துவரி மற்றும் காலிமனை வரி 6% உயர்த்தப்படுகிறது.

இதற்கு பல்வேறு தரப்பட்ட பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சொத்து வரி உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. சென்ற ஆண்டு வீட்டுவரி பன்மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில் மின் கட்டணமும் உயர்த்தப்பட்டது.

இந்த ஆண்டும் சொத்து வரி உயர்த்தப்பட்டால் வாடகை வீட்டுக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை அரசு யோசித்ததாக தெரியவில்லை. சகட்டு மேனிக்கு ஆண்டுதோறும் உயர்வு என்றால் ஒரு கட்டத்தில் முடியாத அளவில் இந்த வீட்டுவரி உயர்வு இருக்கும். தற்போது சட்டப்பேரவை நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் இந்த 6% சொத்து வரி உயர்வை எதிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..