ஈஸ்டர் திருநாள்… டெல்லி தேவாலயத்திற்கு சென்றார் பிரதமர் மோடி..!

ஸ்டர் தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் உள்ள Sacred Heart தேவாலயத்திற்குச் சென்று, அங்கே இருந்த பாதிரியார்களுக்கும் வழிபாட்டிற்காக தேவாலயத்தில் திரண்டிருந்த மக்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.பின்னர் அவர்கள் பிரார்த்தனை செய்தபோது அவர்களுடன் இணைந்தார்.

பின்னர் வளாகத்தில் மரக்கன்றும் நட்டார். கிறிஸ்தவ மக்கள் பெரும்பான்மையாக உள்ள கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெற்ற தேர்தல் வெற்றிக்குப் பின்னர் சிறுபான்மையினர் மத்தியில் உள்ள பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என கூறப்படும் நிலையில், ஈஸ்டர் தினத்தில் தேவாலயத்திற்குச் சென்று பிரதமர் வாழ்த்து தெரிவித்தது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின், ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்’ என்னும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அதாவது எந்தவித பாகுபாடுமின்றி அனைவருக்கும் மேம்பாடு என்ற பொன்மொழிகளுக்கு தனது அரசாங்கத்தின்உறுதிப்பாட்டை பிரதமர் மோடி அடிக்கோடிட்டு  காட்டியுள்ளார். இன்று காலை, “ஈஸ்டர் திருநாளை ஒட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பு வாய்ந்த இந்த தினம் நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை வலுவாக்கட்டும். இந்த நாளில் கர்த்தராகிய கிறிஸ்துவின் பக்தி எண்ணங்களை நினைவுகூர்வோம்” என்று வாழ்த்தியிருந்தார்.

முன்னதாக இன்று காலை, புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு பொன் விழா, நாடு முழுவதிலும் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி இன்று பந்திப்பூர், முதுமலை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது பந்தியூர் புலிகள் காப்பகத்தில்  இருந்து வாகனம் மூலம் முதுமலை வந்தார். முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமுக்கு காலை 11.15 மணிக்கு வந்தார். முதுமலை வந்த பிரதமரை வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், ஐஜி சுதாகர் எஸ்பி கி.பிரபாகர் ஆகியோர் வரவேற்றனர். மேலும், புலிகள் காப்பக திட்டம் குறித்து வனத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மசினகுடி வந்தார். காலை 11.15 மணிக்கு தெப்பக்காடு வந்த பிரதமர் நிகழ்ச்சிகளை முடித்து 11.50 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மைசூர் புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.