அரசு உத்தரவை மீறிய தனியார் பள்ளிகள்..? கடும் நடவடிக்கை பாயும்… அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை.!!

சென்னை: கோடை வெயிலின் வெப்பம் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி ஜூன் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசின் இந்த உத்தரவை சில தனியார் பள்ளிகள் மீறியதாக பெற்றோர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் பள்ளி அளவில் அந்தந்த மாவட்ட வாரியாக ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. தேர்வுகள் முடிந்த பிறகு ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு உள்ளிட்ட மாணவ மாணவிகளுக்கு தேர்வுகள் முடிந்த பிறகு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

அண்மையில் 10 ,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இருந்த நிலையில், ஜூன் 1-ந் தேதி, 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜூன் 5-ந் தேதி பள்ளிகள் தொடங்கும் என்றும் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்பது பெற்றோர்கள் மத்தியில் இருந்த கோரிக்கையாக இருந்தது. இதையடுத்து, முதல்வரிடம் கலந்து ஆலோசித்து விட்டு அறிவிப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்து இருந்தார். தொடர்ந்து தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

இதனால் பெற்றோர்களும் மாணவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இதனிடையே, அரசின் இந்த உத்தரவை தனியார் பள்ளிகள் காற்றில் பறக்க விட்டதாக புகார்கள் எழுந்தன. சில இடங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் செய்திகள் வெளியானது. பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்புமாறு பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், அரசின் உத்தரவை மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை பாயும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளியை திறந்ததாக செய்தி வெளியான சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது:- கோடை வெயில் அதிகமாக இருப்பதையொட்டி பள்ளிகள் திறக்கும் தேதியை 7-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனினும் இதை மீறி சில மீறி தனியார் பள்ளிகள் திறந்திருந்தால் அந்த பள்ளிகளின் மீது அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள்.

சிபிஎஸ்இ பள்ளிகள் அதுவும் பத்தாம் வகுப்பிற்கு மேல் உள்ளவை திறந்து இருக்கலாம். தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் திறந்து இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட வாரியாக இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.