ரூ.3233 கோடி முதலீடுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் – சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 9 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று இரவு 10 மணி அளவில் சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த சுற்றுப்பயணத்தில் பல்வேறு பெருநிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி அளித்தார். அதில், “ரூ.3,233 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த பயணத்தின் மூலம் குறைந்தபடசம் ரூ.3 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்கத் திட்டமிட்டோம். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” எனக் கூறினார்.

மேலும், உலக முதலீட்டாளர் மாநாட்டை தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக நடத்தும் என்றும் உறுதி கூறினார். தமிழகத்தில் வருமான வரித் துறை ரெய்டு குறித்து பேசிய அவர், மத்திய அரசு வருமான வரித்துறையையும், அமலாக்கத்துறையையும் எப்படி பயன்படுத்தி வருகிறது என்பது தெரியும். அது இப்போது தமிழ்நாட்டிலும் ஆரம்பித்திருக்கிறது என்றார்.

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்குச் சென்று அங்குள்ள முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்களை அடுத்த ஆண்டு நடக்கும் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்குமாறு வரவேற்றிருக்கிறார்.

முன்னதாக, ட்விட்டரில் இந்தச் சுற்றுப்பயணம் பற்றி நினைவுகூர்ந்து பதிவிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு நாளும் தான் பங்கேற்ற நிகழ்வுகள் குறித்து நாட்குறிப்பு வடிவில் பதிவிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டின் மீதும் – தமிழ்நாடு அரசின் மீதும் – தமிழ்நாட்டு மக்களின் மீதும் மிகப்பெரிய நம்பிக்கையை ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் தொழில் முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டில் ஜனவரி 2024-இல் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு ‘வருக வருக’ என அனைவரையும் அழைத்து, ‘கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சி போலன்றித் தமிழ்நாடு மாறியிருக்கிறது. தமிழ்நாடு அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது’ என்ற நம்பிக்கையை தொழில் முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்திய மனமகிழ்வுடன், வெற்றிகரமாக சென்னை திரும்புகிறேன்” என்று எழுதியுள்ளார்.

மேலும், “நமக்கான பணிகள் காத்திருக்கின்றன. முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை சிறப்பாகக் கொண்டாடுவோம். அவர் உருவாக்கிய நவீனத் தமிழ்நாட்டை, முதன்மை மாநிலமாக உயர்த்திக் காட்டுவோம்.” எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.