கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய சிறை கைதி 1 வருடத்திற்கு பின் சிக்கினார்..!

கோவை என்.எச்.ரோடு ஐந்து முக்கு மாகாளியம்மன் கோவில், ரயில் நிலையம் முன் உள்ள விநாயகர் கோவில்,கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் உள்ள விநாயகர் கோவில் ஆகியவற்றில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி டயர்களை போட்டு ஒருவர் தீ வைத்து எரித்தார் .இது தொடர்பாக பெரியகடை வீதி ,உக்கடம் ரேஸ்கோர்ஸ் போலீசார் மற்றும் 12 தனிப்படை விசாரணை நடத்தினர். இதையடுத்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் என். எச் .ரோடு மாகாளியம்மன் கோவில் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஒரு ஆசாமி பழைய டயர்களை கோவிலில்  போட்டு தீ வைத்து எரிக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி தீ வைத்தது சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த கஜேந்திரன் ( வயது 50) என்பது தெரிய வந்தது . இதையடுத்து சேலத்தில் பதுங்கி வந்த கஜேந்திரனை கடந்த 20 20 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் தேதி தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்தனர். கஜேந்திரன் மீது இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்த முயற்சி உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த கஜேந்திரனுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கஜேந்திரன் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த கஜேந்திரன் ஜனவரி மாதம் 28ஆம் தேதி இரவு அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். அங்கு காவலில் இருந்த போலீசார் அவரை பல இடங்களை தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை .இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து கஜேந்திரனை தேடி வந்தனர். கடந்த ஓரு ஆண்டாக தலைமறைவாக இருந்த கஜேந்திரன் சேலத்தில் பதுங்கி இருப்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசருக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீசார் சேலத்துக்கு சென்று கஜேந்திரனை மடக்கி பிடித்து கைது செய்து பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்..