ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்க செப்.14-ல் பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் பயணம்..!

புதுடெல்லி: வரும் 15, 16-ம் தேதிகளில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தான் செல்கிறார்.

இந்த மாநாட்டில் சீனா, ரஷ்யா உள்ளிட்ட15 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் ஆகிய 5 நாடுகள் இணைந்து கடந்த 1996-ம் ஆண்டு ‘ஷாங்காய் பைவ்’ என்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பின்னர், இந்த 5 நாடுகள் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 6 நாடுகளின் தலைவர்கள் கடந்த 2001-ல் ஷாங்காய் நகரில் கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது அரசியல், பொருளாதார ரீதியாக இணைந்து செயல்படுவதற்காக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை (எஸ்சிஓ) உருவாக்கினர்.

இந்த அமைப்பில் முதலில் 6 நாடுகள் உறுப்பினராக இருந்தன. பின்னர் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளும் 2017-ம் ஆண்டு இணைந்தன. ஐரோப்பிய, ஆசிய நாடுகளின் மொத்த நிலப்பரப்பில் 60 சதவீத நிலப்பரப்பு மற்றும் உலக மக்கள்தொகையில் ஏறத்தாழ 40 சதவீத மக்கள்தொகை இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது யூரேசியாவின் (ஐரோப்பா-ஆசியநாடுகள்) அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்புக்கான அமைப்பாகும். இந்த பிராந்தியம் பூகோள ரீதியிலும், மக்கள் தொகை அடிப்படையிலும் உலகின் மிகப் பெரிய பிராந்தியமாகும்.

சுழற்சி முறையில் ஆண்டுக்கு ஒரு நாடு இந்த அமைப்புக்குத் தலைமை வகிக்கும். இவ்வாறு தலைமை வகிக்கும் நாடு, ஆண்டுதோறும் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்உச்சி மாநாட்டை தலைமை வகித்து நடத்தும்.

அந்த வகையில் 22-வது உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் வரும் 15, 16-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு முதல்முறையாக நேரடியாக இந்த உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கு முன் 2019-ல் கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நேரடி மாநாடு நடைபெற்றது.

இந்த ஆண்டு நடைபெறும் மாநாட்டில், உறுப்பு நாடுகள் மற்றும் பார்வையாளர் நாடுகளின் தலைவர்கள், அமைப்பின் பொதுச் செயலர்கள், எஸ்சிஓ மண்டல தீவிரவாத தடுப்பு கட்டமைப்பின் செயல்இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்ஜியோயேவ் அழைப்பு விடுத்திருந்தார். இதையேற்று, இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் 14-ம் தேதி பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் செல்கிறார்.

மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஈரான் அதிபர்இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 15 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எஸ்சிஓ அமைப்பின் கடந்த 20 ஆண்டுகால நடவடிக்கைகள் இந்த மாநாட்டில் மறுஆய்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உறுப்பு நாடுகள் இணைந்து செயல்படுவது குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்தும் இதில் விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர்நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட தலைவர்களுடன் தனியாக சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், சமீபகாலமாக மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபை, பிரதமர் மோடி சந்திப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அதேநேரம், கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக முகாமிட்டிருந்த இந்திய, சீன படைகளை விலக்கிக் கொள்வது என சமீபத்தில் நடைபெற்ற இருதரப்பு ராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இரு நாடுகளின் படைகளும் பின்வாங்கி வருவதால், இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 16-ம் தேதி பிரதமர் மோடி நாடு திரும்புகிறார்.

இந்த உச்சி மாநாடு முடிந்ததும், எஸ்சிஓ அமைப்பின் ஓராண்டுக்கான தலைமைப் பொறுப்பை சுழற்சி அடிப்படையில் இந்தியா ஏற்க உள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டின் உச்சி மாநாடுடெல்லியில் நடைபெறும். இதில், உறுப்புநாடுகள் மற்றும் பார்வையாளர் நாடுகளின் தலைவர்கள் என ஏராளமானோர் பங்கேற்பர்.

எஸ்சிஓ அமைப்பில் உறுப்பினராக 8 நாடுகளும், பார்வையாளராக ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான் மற்றும் மங்கோலியா ஆகிய 4 நாடுகளும் உள்ளன. மேலும், இந்த அமைப்பில் இணைவது குறித்துஅர்மீனியா, அஜர்பைஜான், கம்போடியா, நேபாளம், இலங்கை, துருக்கி ஆகிய 6 நாடுகள் பேச்சு வார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.