கூரியர் ஊழியர் போல் நடித்து பெண்ணை கத்தியால் குத்தி நகையை பறிக்க முயற்சி-வாலிபருக்கு வலை..!

கோவை புதூரில் கூரியர் நிறுவன ஊழியர் போல் வந்து பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிக்க முயற்சி நடைபெற்றது. இதில் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

பட்டப் பகலில் நடைபெற்ற நகை பறிப்பு முயற்சி குறித்து காவல்துறையினர் கூறும் போது:-

கோவையில் உள்ள கோவை புதூர் தில்லை நகர் 2 வது வீதியைச் சேர்ந்த சங்கீதா. இவருடைய கணவர் மோதிலால் தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சங்கீதா தன்னுடைய குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தார். அப்பொழுது ஒரு வாலிபர் கூரியர் தபால் வந்து இருப்பதாக கூறினார். அந்த வீட்டில் நாய் இருப்பதால் வீட்டை விட்டு வெளியே வந்து தபாலை வாங்குமாறு கூறியதால் சங்கீதா வீட்டிலிருந்து வெளியே வந்தார். உடனே அந்த வாலிபர் தபால் கொடுப்பது போல் திடீரென சங்கீதாவின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் நகையை பிடித்தபடி கூச்சல் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கத்தியால் சங்கீதாவின் தோள்பட்டையில் குத்தினார். இதனால் சங்கீதா நிலை தடுமாறினார்  ரத்த வெள்ளத்தில் துடித்தார். இந்நிலையில் அந்த ஆசாமி அங்கு இருந்து தப்பி ஓட விட்டார். மேலும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சங்கீதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே காவல் அதிகாரிகள் விரைந்து வந்து நகையை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறும் போது..

அந்த ஊழியர் உண்மையான கூரியர் ஊழியர் கிடையாது. கூரியர் ஊழியர் போல் நடித்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு குற்றவாளியை விரைவில் பிடித்து விடுவோம் என்றும் தெரிவித்தனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் குடியிருப்போர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.