கர்நாடகவில் இருந்து மதுபானம் கடத்திய நபர் தப்பி ஓட்டம் – 350 மதுபான பாக்கெட்டுகள் பறிமுதல்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி தமிழக கர்நாடகா எல்லையில் அமைந்துள்ளதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள மதுபான கடைகளில் இருந்து குறைந்த விலை மதுபானங்களை  வாங்கி தாளவாடி மலை பகுதிக்கு கொண்டு வந்து மலை கிராமங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது வாடிக்கையாக உள்ளது. இதற்கிடையே தாளவாடி போலீசார் தாளவாடி – தலமலை சாலையில் உள்ள மகாராஜன்புரம் வன சோதனைசாவடி அருகே ரோந்து சென்ற போது பைக்கில் சாக்கு மூட்டையுடன் அவ்வழியே வந்த ஒரு நபர் போலீசாரை கண்டதும் பைக்கை நிறுத்திவிட்டு வனப்பகுதிக்குள் தப்பி ஓடி மறைந்தார். இதையடுத்து போலீசார் பைக்கில் இருந்த சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்த சோதனையிட்டபோது அதில் 180 மில்லி அளவுள்ள 350 மதுபான பாக்கெட்டுகள் இருந்ததும்,  இந்த மதுபான பாக்கெட்டுகள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மதுபான கடையில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி தாளவாடி மலைப்பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முயற்சித்ததும், பைக்கில் மதுபானங்களை கடத்தி வந்த நபர் தாளவாடி அருகே உள்ள முதியனூர், அம்பேத்கர் வீதியைச் சேர்ந்த ரங்காராம் (38) என்பதும் தெரிய வந்தது.  இதையடுத்து மதுபான பாக்கெட்டுகள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடி தலைமறைவான ரங்காராமை தேடி வருகின்றனர்.