மின் கட்டண உயர்வு: கோவையில் விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்..!

கோவை சோமனூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழில் நடைபெற்று வருகிறது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி நிறுவனங்கள் இங்கு உள்ளன. விசைத்தறி உரிமையாளர்கள் பாவு நூலை பெற்று கூலிக்கு நெய்து கொடுத்து வருகின்றனர். இந்த தொழிலின் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் பெற்று வருகின்றனர். பல கட்ட போராட்டங்களை நடத்தி நெசவுக்கு தற்போது தான் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு பெற்றனர். மேலும் தமிழகத்தில் சாதாரண விசைத்தறி கூடங்களுக்கு மின் கட்டணம் பெரும் சுமையாக இருந்த காரணத்தினால் பல்வேறு போராட்டங்கள் நடத்தி சிறு, குறு தொழில் பிரிவிலிருந்து விசைத்தறியை தனியாக பிரித்து தனி வகைப்படுத்தப்பட்டு மின் கட்டணம் குறைந்த அளவில் கொடுக்கப்பட்டு வந்தது.ஆனால் தற்போது தமிழக அரசு அனைத்து வகை பிரிவிற்கும் 30 சதவிகித மின்கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. மேலும் ஆண்டுக்கு 6 சதவிகிதம் மின்கட்டணம் உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விசைத்தறியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அரசின் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் கோவை சோமனூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சோமனூரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் விசைத்தறி கூடங்கள் அனைத்தும் இன்று காலை முதலே மூடப்பட்டிருந்தது. அந்த பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விசைத்தறி உரிமையாளர்களும் தங்களது விசைத்தறி கூடத்தை மூடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சம் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டு வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வேலைநிறுத்த போராட்டத்தால் அதில் வேலை பார்த்து வந்த பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி தொழில் என்பது நேரடியான முதலாளிகளாக அல்லாமல் பாவு நூலை பெற்று அதனை கூலிக்கு மட்டுமே நெய்து தரக்கூடிய வகையில் விசைத்தறியாளர்கள் செயல்பட்டு வருகிறோம். இதன் காரணமாக பெரிய அளவில் வருமானம் இல்லாத சூழலில் தொழில் செய்து வருகிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மின் கட்டண உயர்வு என்பது கடுமையான இழப்பை ஏற்படுத்தும் என்பதுடன் தொழிலை மேற்கொண்டு நடத்த முடியாத சூழலும் நிலவுகிறது. எனவே அரசு விதித்துள்ள 30 சதவீத மின்கட்டணத்தையும், ஆண்டுக்கு 6 சதவீத கட்டண உயர்வையும் முழுமையாக திரும்ப பெற வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.