2 நாள் பயணமாக சென்னை வரும் பிரதமர் மோடி: 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு..!!

சென்னை: பிரதமர் மோடி 2 நாட்கள் பயணம் சென்னை வருவதால் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44 ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இரு நாட்கள் பயணமாக சென்னை வருகிறார்.

வியாழக்கிழமை குஜராத்திலிருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையான எஸ்பிஜி குழுவை சேர்ந்த 60 பேர டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளனர். இந்த சிறப்பு படையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து விமான நிலையம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், பிரதமரின் ஹெலிகாப்டர் தரையிறங்கும் அடையாறு ஐஎன்எஸ் தளம் ஆகிய இடங்களில் செய்ய வேண்டிய பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேலும் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்பிஜி உயர் பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, விமான பாதுகாப்பு படை, விமான நிலைய உயரதிகாரிகள், சென்னை மாநகர உயர் அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. பிரதமர் சென்னை விமான நிலையத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் ஓய்வு எடுக்கும் அறையில 45 நிமிடங்கள் இருப்பார். பிரதமரை வரவேற்க எத்தனை பேருக்கு பாஸ் வழங்குவது, அவரை சந்திக்க யாருக்கெல்லாம் அனுமதி கொடுப்பது போன்ற அம்சங்களும் ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது.

சென்னையிலிருந்து பிரதமர் டெல்லி புறப்பட்டு செல்லும் வரை சென்னை விமான நிலையத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக இருக்கும் என தெரிகிறது. மேலும் விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படையினர் கடடுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். எனவே இங்கு யாரும் அனுமதியின்றி செல்ல முடியாது.

இந்த அலுவலகத்தில் பழைய விமான நிலைய வளாகத்தில் கார்கோ, கொரியர் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. அங்கும் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு அனுமதி இல்லை. நிரந்தர ஊழியர்கள் முறையாக அனுமதி பெற்று நிரந்தர அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். இது போன்ற கட்டுப்பாடுகள் வரும் 29 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.