பிளஸ் 2 பொது தேர்வுகள் இன்றுடன் நிறைவு – மே 5ம் தேதி முடிவுகள் வெளியாகும் ..!

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து 10ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி, மே மாதம் முடிவுகள் வெளியாக உள்ளன.

பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கியது. இதில், தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 4 லட்சத்து 3 ஆயிரத்து 156 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 33 ஆயிரத்து 436 பேர் மாணவியர், மூன்றாம் பாலினத்தவர் 1. இவர்களுக்காக 3185 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. புதுச்சேரியை சேர்ந்த பள்ளிகளில் இருந்து 6 ஆயிரத்து 982 மாணவ, மாணவியர், 7728 மாணவியர் என 14 ஆயிரத்து 710 பேர் 40 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். இவர்களை தவிர தனித் தேர்வர்களாக 14 ஆயிரத்து 966 பேர் 134 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், முதல் நாள் தேர்வான மொழிப்பாடம்(தமிழ்) தேர்வில் 49 ஆயிரம் மாணவ மாணவியரும், ஆங்கிலப் பாடத் தேர்வில் 50 ஆயிரம் மாணவ மாணவியரும் பங்கேற்கவில்லை. இறுதி நாளான இன்று வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடக்க இருக்கின்றன. இதுவரை நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வுகளில் கணக்கு மற்றும் இயற்பியல் பாடத் தேர்வுகளில் கடினமான கேள்விகள் இடம் பெற்றதால் மாணவர்கள் அந்த பாடத் தேர்வுகளில் செண்டம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மேற்கண்ட தேர்வுகள் முடிந்ததும் ஒவ்வொரு நாளும், அந்த விடைத்தாள்கள் கட்டுகளாக கட்டப்பட்டு அந்தந்த மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அங்கிருந்து விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அவை 7ம் தேதி அனுப்பி வைக்கப்படும். அதற்கு பிறகு 10ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கும். முதன்மைத் தேர்வர்களாக நியமிக்கப்பட்டுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் முதல் இரண்டு நாட்கள் விடைத்தாள் திருத்துவர். அதற்கு பிறகு ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதையடுத்து தமிழ்நாட்டில் 44 திருத்தும் மையங்கள் உருவாக்கப்பட்டு அவற்றில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த உள்ளனர். இந்த பணி 24ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, மே மாதம் 5ம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது..