புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து டார்ச்சர் செய்யும் முன்னாள் கணவர்.. நடவடிக்கை எடுக்க கோரி கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற இளம் பெண்ணால் பரபரப்பு..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவர் இன்று கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தனது தாய் மற்றும் மகனுடன் வந்து மண் எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்து மண்எண்ணை பாட்டிலை பறித்தனர். பின்னர் இளம்பெண் கூறியதாவது:-
கடந்த 2016-ம்ஆண்டு எனக்கும், பொள்ளாச்சி கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் எனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது குறித்து நான் கேட்டபோது எங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் ஜமாத்தார்கள் பேச்சுவார்த்தை  நடத்தி மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்தோம். அப்போது நான் கர்ப்பமானேன். 3 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் எங்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து நான் அவரை பிரிந்து விவாகரத்து பெற்று எனது தாய் வீட்டில் வசித்து வருகிறேன்.
தற்போது எனக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் எனது கணவர் எனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பல்வேறு நபர்களுக்கு அனுப்பி வருகிறார். இதனால் நான் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எனது பெற்றோர் வேறு ஒருவருடன் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனை அறிந்த எனது முன்னாள் கணவர் தற்போது எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்திற்கு சித்தரித்த ஆபாச படங்களை அனுப்பி எனக்கு டார்ச்சர் செய்து வருகிறார். இதனால் என்னுடைய 2-வது கணவரும் என்னை பிரிந்து சென்று விட்டார்.
தற்போது நான் வாழ வழி இல்லாமலும் வேலைக்கு செல்ல முடியாமலும் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். இது குறித்து போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சித்தரித்த ஆபாச படங்களை வைத்து எனக்கு டார்ச்சர் செய்து வரும் எனது முன்னாள் கணவர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.