அலங்கரிக்கப்பட்ட புஷ்பரதத்தில் ஊர்வலமாக வந்த பண்ணாரி அம்மன்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் பங்குனி குண்டம் திருவிழாவை ஒட்டி புஷ்பரத ஊர்வலம் நடைபெற்றது. பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் இரவில் கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட புஷ்பரதம் மாட்டு வண்டியில் சிம்ம வாகனத்தில் பண்ணாரி அம்மன் எழுந்தருளி அருள் பாலித்தார். செண்டை மேளம் முழங்க கோவில் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி புஷ்பரதத்தில் எழுந்தருளிய பண்ணாரி அம்மனை வழிபட்டனர். புஷ்பரத ஊர்வலம் கோயில் முன்பு தொடங்கி கோவிலை சுற்றி வலம் வந்தது. அப்போது பக்தர்கள் ரதத்துடன் ஊர்வலமாக கோயிலை சுற்றி வந்தனர். இதைத் தொடர்ந்து பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.