ஓபிஎஸ், சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் எந்த காலத்திலும் இடமில்லை- இபிஎஸ் திட்டவட்ட அறிவிப்பு..!

சென்னை: ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோருக்கு எந்த காலத்திலும் அதிமுகவில் இடமில்லை. அவர்களை கட்சியில் இணைக்கும் திட்டமும் இல்லை என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் உள்ள கட்சிகளில் பாசமுள்ள கட்சி அதிமுக. கட்சி நிர்வாகி அழைப்பால் விழாவுக்கு வந்தேன். அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் திமுகவுடன் இணைய பேசிக் கொண்டிருப்பதாக சொல்கிறீர்கள்.

அதிமுக என்பது தொண்டர்களால் ஆளப்படும் கட்சி. ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை. அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும், வழக்கின் விசாரணை முடிவிலேயே தீர்ப்பு எங்களுக்கே சாதகமாக வரும். அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி தொடங்கிய விசாரணை காலம் தாழ்ந்த நடவடிக்கை. கட்சி தலைமையகத்தில் பொருட்கள் திருடு போனதாக புகார் அளித்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நீதிமன்றத்தை நாடியதால் தான் தற்போது அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற இந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றார்.