அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கான இடஒதுக்கீடு அமல்படுத்துக- தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்..!

அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கான இடஒதுக்கீடு அமல்படுத்துக என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமல்படுத்தும் வகையில் திருத்தங்களை கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அரசு பணியில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கி 2016-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இதனடிப்படையில் 30% இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70 சதவீதம் போட்டியிடும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டப்பிவை எதிர்த்தும், பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய நடைமுறையை எதிர்த்தும் பல வழக்குகள் தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு வழக்கை முடித்து வைத்தது. அப்போது, 30 சதவீத பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நிரப்பிவிட்டு அதன் பின்னர் சமுதாய இடஒதுக்கீட்டை தமிழக அரசு தேர்வாணையம் பின்பற்றி காலியிடங்களை நிரப்புவது வேதனைக்குரியது. இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது.

இந்த நடைமுறை படி பெறப்பட்ட நியமனங்களை ரத்து செய்வது முறையாக இருக்காது. அதே சமயம் தகுதி அடிப்படையில் பணி நியமனம் பெறும் உரிமைகளை மறுக்க முடியாது. மேலும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, முதலில் பொது பிரிவு, சமூக ரீதியிலான ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பி விட்டு, அதில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு பூர்த்தியாகவில்லை என்றால் எத்தனை இடங்கள் நிரப்ப வேண்டுமோ, அத்தனை இடங்களில் பெண்களை நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டனர். எனவே, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப எதிர்காலத்தில் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளும் வகையில் விதிகளில் திருத்தங்களை கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.