ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் : கேம் விளையாடுபவர்களை கணக்கெடுக்கும் பணியில் களமிறங்கிய காவல்துறை..!

ன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை தமிழ்நாடு காவல்துறை தொடங்கியுள்ளது.

கடந்த மார்ச் 23ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் தடை சட்டத்தின் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே அனுப்பபட்ட சட்டமுன்வடிவு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது. ஆளுநர் திருப்பிய அனுப்பிய கடிதத்தில் இடம்பெற்றிருந்த விவரங்களை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இதனையடுத்து ஆளுநர் திருப்பிய அனுப்பிய கடிதம் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்த சட்ட முன்முடிவை தமிழ்நாட்டில் உள்ள பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் மற்றும் திமுகவின் கூட்டனி கட்சிகள் உள்ளிட்டோர் ஏகமனதாக ஆதரவு தெரிவித்ததையடுத்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட சட்ட மசோதா நிறைவேறியதாக சபநாயாகர் அப்பாவு அறிவித்தார்.

இரண்டாவது முறையாக சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆன்லைன் தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் ஏப்ரல் 10 அன்று ஒப்புதல் அளித்தார். இரண்டாம் முறை சட்ட மன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஆளுநர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் என்பது விதியாகும்.

சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக பெரும்பான்மையான தீர்மானம் நேற்று முந்தினம் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநரும் இந்த ஒப்புதலை அளித்தார். இதனையடுத்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டது.

இதன் அடிப்படையில் புதிதாக பிறப்பிக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்டத்தின்படி, தடை செய்யப்பட வேண்டிய ஆன்லைன் விளையாட்டு பட்டியலை தமிழ்நாடு காவல்துறை தயார் செய்து வருகிறது.

சைபர் கிரைம் பிரிவு காவலர்கள் மூலம் இந்த பட்டியலை தமிழ்நாடு காவல்துறை தயார் செய்து வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக சென்னை சைபர் கிரைம் காவல்துறை, ஆன்லைன் சூதாட்ட செயலி மற்றும் இணையதளங்களை கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளது.

பட்டியல் தயாரிக்கப்பட்ட பின், சம்பந்தப்பட்ட செயலி மற்றும் இணையதள நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ள காவல்துறை, ஆன்லைனில் சூதாட்டம் விளையாடுபவர்களை கண்டறியவும் திட்டம் வகுத்து வருகிறது.