வெங்காய ஏற்றுமதிக்கான தடை மார்ச் 31 வரை தொடரும் – மத்திய அரசு அறிவிப்பு.!!

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மார்ச் 31- ஆம் தேதி வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

உள்நாட்டில் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும், விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. கடந்த டிசம்பர் 8-ந்தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கான தடையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி மார்ச் 31-ந்தேதி வரை தடை தொடரும் என்றும் மத்திய அரசின் நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார். மேலும் நுகர்வோருக்கு நியாயமான விலையிலும், போதுமான அளவிலும் உள்நாட்டிலேயே வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.