கோவையில் ஓணம் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் : அய்யப்பன் கோவிலில் 1250 பேருக்கு 20 வகையான அறுசுவை உணவு ‘ஓணம் சத்தியா’ விருந்து..!!

கோவை: கேரள மாநிலத்தில் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை, இன்று கோவையில் மலையாள மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தமிழக-கேரள எல்லை பகுதியான பொள்ளாச்சி, ஆனைகட்டி, ஊட்டி உள்ளிட்ட
பகுதிகளிலும் ஓணம் கொண்டாட்டங்கள் களைகட்டின. ஓணம் பண்டிகையையொட்டி
கோவையில் உள்ள மலையாள மொழி பேசுபவர்கள் புத்தாடை அணிந்து, சுற்றத்தாருடன் இணைந்து வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டும், விஷூக் கனி படையலிட்டும், பல வகையான அறுசுவை உணவுகளை படைத்து கொண்டாடினர்.
கோவையில் ஓணம் பண்டிகையையொட்டி சித்தாபுதூர் அய்யப்பன் கோவிலில் இன்று
காலை 5.15 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் 1¼ டன் பூக்களால்
சாமிக்கு அலங்காரம் மற்றும் அத்தப்பூ கோலமிடப்பட்டது. மதியம் 11.30 மணி
வரையிலும், மாலை 5 மணியில் இருந்து இரவு 9 மணி வரை நடை திறந்து இருந்தது.

சிறப்பு வழிபாட்டு பூஜைகள் நடந்தது. திரளான பேர் கலந்து கொண்டு
வழிப்பட்டனர். தொடர்ந்து ‘ஓணம் சத்தியா’ என்று அழைக்கப்படும் விருந்து
நிகழ்ச்சியும் நடந்தது. இதில் 1250 பேருக்கு 20 வகையான அறுசுவை உணவு
பரிமாறப்பட்டது. அதேபோன்று ராமநாதபுரத்தில் உள்ள கிருஷ்ணர் கோவில்,
வடவள்ளியில் உள்ள முத்தப்பன் கோவில் உள்பட கோவில்களில் சிறப்பு பூஜைகள்
நடைபெற்றன.

கேரள சமாஜம் சார்பில் கணபதியில் உள்ள தனியார் பள்ளியில் அத்தப்பூ கோலம்
போடும் நிகழ்ச்சி மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்
நடக்க உள்ளது. இதன் மூலம் கோவையில் ஓணம் பண்டிகையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் கொண்டாட்டங்கள் மூலம் மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார்கள். மலையாள மக்கள் அனைவரிடமும் ஓணம் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.