ஆபாச வீடியோ பாதிரியார் மாற்றம்: பெண் அளித்த புகாரில் போலீசார் விசாரணை..!

நாகர்கோவில்: தக்கலை அருகே ஆபாச ‘வீடியோ’வில் சிக்கிய பாதிரியார் பெனடிக் ஆன்றோ, வேறு சர்ச்சுக்கு மாற்றப்பட்டார். அவர் மீதான புகாரை ஏ.டி.எஸ்.பி., விசாரிக்கவுள்ளார்.

தக்கலை அருகே உள்ள சர்ச் பாதிரியார் பெனடிக்ஆன்றோ. ஒரு வாரத்துக்கு முன் இவரை தாக்கிய கும்பல் அவரது லேப்டாப்பை பறித்து சென்றது. இதுதொடர்பாக பிலாவிளை சட்டக்கல்லுாரி மாணவர் ஆஸ்டின் ஜியோ மீது பாதிரியாரின் பெற்றோர் புகார் கொடுத்தனர்; மாணவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கல்லுாரி மாணவி ஒருவருடன் அந்த பாதிரியார் நெருக்கமாக இருக்கும் ‘வீடியோ’ சமூகவலைதளங்களில் பரவியது. இருவரும் ஆபாசமாக இருக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. வீடியோ பரவியதை அடுத்து பாதிரியாரை வேறு இடத்துக்கு மாற்றி பிஷப் அலுவலகம் உத்தரவிட்டது. இதற்கிடையில், மாணவர் ஆஸ்டின் ஜியோ தாய், போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதில் பாதிரியார் இளம்பெண்ணை பாலியல் ரீதியாக தொல்லை செய்வதாகவும், அப்பெண் தற்கொலை முடிவில் இருப்பதாகவும், அதை தட்டிக்கேட்ட மகன் ஆஸ்டின் ஜியோ மீது பொய் புகார் கொடுத்து கைது செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் மீது ஏ.டி.எஸ்.பி., விசாரணை நடத்தவுள்ளார். இவ்விவகாரத்தில் இருந்து தப்பிக்க அந்த பாதிரியார் தன் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.