இனி சசிகலாவின் ஆட்டத்தை பார்க்க போறீங்க… அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல முடிவு… ஓபிஎஸ்-ஈபிஎஸ் முடிவு என்ன..?

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல உள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் பதவிக்காக ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோர் முற்றிக் கொண்டு இருக்கும் நிலையில், தானே பொதுச்செயலாளர் எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கும் சசிகலாவும் 3ஆம் ஆட்டத்தில் இணைய காத்திருக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் பேசிய அவர், ஒருவரின் சுயநலத்திற்காக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை கிடைக்க விடாமல் செய்ததை ஏற்க முடியாது என்றார். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய நேரத்தில் தொண்டர்களுடன் செல்ல இருப்பதாகவும் அதிமுகவில் இருந்து யார் யாரையும் நீக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, பூந்தமல்லியில் பேசிய அவர், “அதிமுகவுக்கு ஒற்றை தலைமை கண்டிப்பாக வேண்டும். அதே சமயத்தில் தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்து செல்கின்ற தலைமையாக, தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற தலைமையாக இருக்க வேண்டும். பண பலமும், படை பலமும் ஒரு தலைமையை தீர்மானிக்க முடியாது. மக்கள் பலமும், தொண்டர் பலமும் தான் ஒரு தலைமையை தீர்மானிக்கும். தனக்கு ஆதரவாக சிலரை பேச வைத்து விட்டு நான் தான் தலைமை என்று தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு வலுக்கட்டாயமாக நாற்காலியை பிடித்துக் கொண்டு இருந்தால் தலைவராக ஆகிவிட முடியாது” என்றார். அதிமுகவில் ஒற்றைத் தலைமையை முன்வைத்து பூகம்பமே வெடித்து இருக்கும் நிலையில், ஜூலை 11ஆம் தேதி அறிவிக்கப்படி பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா ? நடந்தாலும் செல்லுபடி ஆகுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.