புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

புத்தாண்டு நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்துள்ளன.

தமிழகம் முழுவதும் நாளை புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நட்சத்திர விடுதிகள், கடற்கரை ரிசார்ட்கள், தனியார் கிளப்கள் உள்ளிட்ட இடங்களில் இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் கலந்து கொண்டு புத்தாண்டை கோலாகலமாக வரவேற்க பலர் தயாராகி வருகின்றனர்.

இதனையொட்டி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை மாநகரம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் முக்கிய சாலைகளின் போக்குவரத்தை மாற்றி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, சென்னையில் வடபழனி, அசோக்நகர், கோடம்பாக்க உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு பாதுகாப்பு பணிக்காக போலீசார் சாமியான பந்தல் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். புத்தாண்டு தினங்களில் இளைஞர்கள் பைக் ரேஸ் உள்ளிட்ட சாகசங்களில் ஈடுபடாத வண்ணம் இந்த சோதனையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் போது வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனம் இயக்குகிறார்களா, அவர்களிடம் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.புக் உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளனவா என போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்