4 வயது குழந்தை இறந்த துக்கத்தில் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை-கோவையில் சோக சம்பவம்..

கோவை நவக்கரையை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 40) தொழிலாளி. இவரது மனைவி ராதாமணி (37). இவர்களுக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் அவர்களது 2-வது மகள் சன்மதி (4) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால் ராதாமணி சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நவக்கரையில் உள்ள ஒரு தோட்டத்திற்கு சென்றார். அங்குள்ள கிணற்றில் திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து கே.ஜி.சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராதாமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.