மகனை கட்டையால் அடித்துக் கொன்ற தாய் கைது – கோவையில் பரபரப்பு..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள மோத்தேபாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் .லாரி டிரைவர். இவரது மனைவி சித்ரா ( வயது 45) இவர்களுக்கு சதீஷ்குமார் ( வயது 24) தினேஷ்குமார் ( வயது 22 )ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அண்ணன்- தம்பிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2ஆம் தேதி சதீஷ்குமாருக்கும், தினேஷ் குமாருக்கும், இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது .இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனைப் பார்த்த தாய் சித்ரா 2 பேரையும் சமாதானம் செய்தார் .ஆனால் அவர்கள் கேட்காமல் தொடர்ந்து தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த தாய் சித்ரா கீழே கடந்த கட்டையை எடுத்து 2 மகன்களையும் சரமாரியாக அடித்தார். இதில் அண்ணன் சதீஷ்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கீழே விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சதீஷ்குமார் இறந்தார். தம்பி தினேஷ் குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர். நவநீதகிருஷ்ணன்,சப் இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம் முருகநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தாய் சித்ராவை கைது செய்தனர்.பெற்ற மகனை தாயே கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.