மதுரையில் ‘மோடி கபடி’: செப்டம்பர் 27 முதல் 4 நாட்கள் நடக்கிறது..!

மதுரை : பாஜக  சார்பில் மாநில அளவிலான ‘மோடி கபடி’ இறுதிப் போட்டி செப்டம்பர் 27 முதல் 30 வரை மதுரையில் நடக்க உள்ளது.

தமிழக பாஜக  சார்பில் ‘மோடி கபடி’ என்ற பெயரில் பிரதமர் பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் மாநில அளவில் ‘லீக்’ போட்டியாக நடத்தப்பட உள்ளது. 234 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியை நடத்தி, கட்சியின் 60 மாவட்ட பகுதிகளில் 60 அணிகளைத் தேர்வு செய்ய உள்ளனர்.இந்த அணிகளுக்குள் போட்டி நடத்தி இறுதிப்போட்டியை மதுரையில் 4 நாட்கள் சர்வதேச தரத்தில் நடத்த உள்ளனர்.

செப்டம்பர் 27 முதல் 30 வரை போட்டி நடைபெறும். முதல் பரிசு ரூ.15 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.10 லட்சம், மூன்றாம் பரிசு 2 அணிகளுக்கு தலா ரூ.5 லட்சம் மற்றும் பங்கேற்கும் அணிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

மதுரை நகர பாஜக  தலைவர் சரவணன் கூறியதாவது: இரவில் நடைபெறும் இப்போட்டிகளில் 900 வீரர்கள் பங்கேற்கின்றனர். மதுரை கல்லுாரி மைதானம் உட்பட சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. போட்டி நாட்களில் தினம் ஒரு மத்திய அமைச்சர், பாஜக மாநில நிர்வாகிகள், சினிமா பிரபலங்கள் மதுரைக்கு வருவர் என்றார்.