உங்கள் மொபைல் தொலைந்து விட்டதா..? கவலை வேண்டாம்… ஈஸியா கண்டுபிடிக்கலாம்.!!

புதுடெல்லி: தொலைந்த மற்றும் திருடப்பட்ட செல்போன்களை மீட்பது பெரிய பிரச்னை. இப்போது அதை எளிதாக்கி திருடப்பட்ட, தொலைந்த மொபைலை மீட்க புதிய வசதியை நாளை முதல் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

சிஇஐஆர்(CEIR) என்ற தொழில்நுட்ப அமைப்பின் இந்த வசதி நாளை முதல் அமலுக்கு வர உள்ள து. டெல்லி , மகராஷ்டிரா, கர்நாடகா, வடகிழக்கு மாநிலங்களில் இந்த வசதி சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது நாளை முதல் நாடு முழுவதும் விரிவு படுத்தப்பட உள்ளது.

இந்த வசதி மூலம் மொபைல் போன்கள் திருடு போனால் அவற்றை முடக்க முடியும் என்பதோடு டிராக் செய்யவும் முடியும். எனவே மொபைல் தொலைந்து விட்டால் சிஇஐஆர் இணைய சேவை மூலமாக மீட்க, புகாரளித்த எப்.ஐ.ஆர் நகலை பயனர்கள் பதிவிட வேண்டும். அதேபோல செல்போனின் மாடல், ஐஎம்இஐ(IMEI) எண்கள், திருடப்பட்ட இடம், செல்போன் எண் உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும். தகவல் சரியாக இருந்தால் 24 மணி நேரத்துக்குள் செல்போன் முடக்கப்படும். பின்னர் அவற்றை கண்காணித்து மீட்கும் நடவடிக்கைகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..