இன்று முதல் தொடங்கியது சட்டப் பேரவை கூட்டத்தொடர்- காவிரி விவகாரத்தில் தனித் தீர்மானம்..!

தமிழ்நாடு மழைக்கால சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முக்கியமாக காவிரி விவகாரம் குறித்து தீமானங்கள் நிறைவேற்றப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் தொடங்கியது. அதனை தொடர்ந்து மார்ச் 20 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது. வழக்கமாக ஒரு கூட்டம் முடிந்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் அடுத்த கூட்டம் கூட வேண்டும். அதாவது ஏப்ரல் 21 ஆம் தேதி முடிவடைந்த கூட்டத்தை தொடர்ந்து அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் கடந்த மாதம் 20 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த பேரவைத் தலைவர் அப்பாவு, அக்டோபர் 9 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் என செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். அதன்படி சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இன்று தொடங்கிய இந்த கூட்டத்தொடர் 5 நாட்களுக்கு  நடைபெறுகிறது.

முதல் நாள் என்பதால் இன்று மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். அதனை தொடர்ந்து சமீபத்தில் காலமான பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ப.சபாநாயகம், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி,வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிய பின் கேள்வி நேரம் தொடங்கும். இதில் இன்று முக்கியமாக 2023-24-ம் ஆண்டின் கூடுதல் செலவினங்களுக்கான துணை மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல காலமாக தமிழ்நாடு மற்றும் கர்நாட்கா அரசு இடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு விவசாயத்திற்காக காவிரியில் இருந்து நீர் திறக்கப்படுகிறது. ஆனால் காவிரி நதிநீர் பங்கிடு தற்போது அரசியல் பிரச்சனையாக மாறியுள்ளது. கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் க்டசி கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட முடியது என தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்சநீதிமன்றமும் தமிழ்நாட்டிற்கு சாதகமாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை வாரியத்திற்கும் பரிந்துரை செய்தது. ஆனால் காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இப்படி மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் காவிரி தொடர்பான அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார் . தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி இந்த தனித் தீர்மானம் அனைத்து கட்சிகளின் முழு ஒத்துழைப்புடன் தனித்தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது .