கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழா : பூ கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபாடு..!

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழா வருகிற 1-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த ஜனவரி மாதம் தேருக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டு திருவிழா தொடங்கியது. பூச்சாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பூஜைகள் செய்யப்பட்ட கம்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் வளாகத்தில் நடப்பட்டது. பின்னர் இதற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்கள் புனித நீர் ஊற்றி வழிபட்டனர். மேலும் கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டது முதல் பக்தர்கள் பூக்கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். மேலும் வருகிற 21-ந் தேதி கொடியேற்றம் மற்றும் அக்னிசாட்சி நிகழ்ச்சி நடைபெறுகிறது. 22-ந் தேதி அம்மன் புலி வாகனத்திலும், 23-ந் தேதி அம்மன் கிளி வாகனத்திலும், 24-ந் தேதி அம்மன் சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா நடைபெறுகிறது. மேலும் அன்றைய நாள் திருவிளக்கு பூஜையும் நடைபெறும். 25-ந் தேதி அம்மன் அன்ன வாகனத்திலும், 26-ந் தேதி அம்மன் காமதேனு வாகனத்திலும், 27-ந் தேதி அம்மன் வெள்ளை யானை வாகனத்திலும் திருவீதி உலா நடைபெறுகிறது. 28-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 1-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.