இறுதி கட்டத்தை எட்டிய கொடநாடு கொலை வழக்கு: உதகை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை…!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது.

இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இதனையடுத்து சில நாட்களில் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் ஒருவர் பின் ஒருவர் மர்மமான முறையில் இறந்தனர். சயான் தனது குடும்பத்தோடு காரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் மனைவி மற்றும் குழந்தை உயிர் இழந்தனர். இதனையடுத்து ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் சாலை விபத்தில் உயிர் இழந்தார். கொடநாடு கணிணி பொறியாளர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அதிமுகவினர் மட்டுமில்லாமல் தமிழக மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனையடுத்து கொடநாடு கொலை சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸார் விசாரித்து சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக கொடநாடு மேலாளர் நடராஜன், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, அதிமுக பிரமுகர் சஜீவன் என பலரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். எனவே இந்த வழக்கு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில், ஜூலை மாதம் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இதுவரை 250க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கேரளாவில் கொரனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் வாகன விபத்தில் இறந்த சயானின் மனைவி,மகள் இறப்பு குறித்து தடயங்கள் சேகரிக்க முடியவில்லை எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டது. இதனையடுத்து ஒரு மாத காலத்திற்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கடவுள்ள நிலையில், கொடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேர் ஆஜராக உள்ளனர்.