பேனர் வைப்பதில் தகராறு… காவல் நிலையத்திலேயே அதிமுகவினரை தாக்கிய 5 பேர் கைது-மருதமலையில் போலீசார் குவிப்பு..!

கோவை மருதமலை அடிவாரப் பகுதியில் உள்ள வள்ளியம்மன் கோவில் ஆறாம் ஆண்டு குடமுழுக்கு திருவிழா இன்று நடைபெறுகிறது. அதனையோட்டி அதிமுக சார்பில் பேனர் வைக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நேற்று இரவு சுமார் எட்டு மணி அளவில் அதிமுகவை சேர்ந்த திவாகர், என்பவரை பேனர் வைப்பதில் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் நடைப்பெற்று பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் அதில் திவாகர் என்பவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகார் கொடுக்க அதிமுகவி”னர் வடவள்ளி காவல் நிலையம் சென்றனர்.

அப்போது இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தனர் வடவள்ளி போலீசார். அப்பொழுது கூட்டத்தில் மறைந்திருந்த அம்சராஜ் (38), சபரி (24), கார்த்திகேயன் (25), பேச்சியப்பன் (27), மணிகண்டன் (26) ஆகியோர் காவல் நிலையத்தில் அதிமுகவினர் மீது தாக்க முற்பட்டனர்.

இதனால் காவல் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அதிமுகவினர் வடவள்ளி காவல் நிலையத்திற்கு அதிக அளவில் வந்து குவிந்தனர். மருதமலை மற்றும் காவல் நிலையத்தில் 50″க்கும் மேற்பட்ட போலீசார் பதட்டத்தை தணிக்க பாதுகாப்பு பணிக்காக இரவு வரவழைக்கப்பட்டனர்.

மேலும் அதிமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் , அதிமுகவினரை தாக்கிய ஐந்து நபர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.