கோவை இளம் பெண்ணின் ஆபாசபடம் – வீடியோவை சமூக வலைத்தளத்தில் பரப்பிய வாலிபர் கைது.

கோவை பிப் 16 நெல்லை மாவட்டம் செண்பகராமநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்( வயது 30) இவர் கேரள மாநிலம் மலப்புரத்தில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கோவையை சேர்ந்த 25 வயது பெண் ஒருவருடன் சமூக வலைதளம் மூலம் நட்பு ஏற்பட்டது .அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தது இருப்பினும் மணிகண்டனும் அந்த பெண்ணும் சமூக வலைதளம் மூலம் பழகி வந்தனர் .அப்போது அந்தப் பெண் தனது புகைப்படங்களை மணிகண்டனுக்கு அனுப்பியதாக தெரிகிறது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அந்த பெண் மணிகண்டனிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் சமூக வலைதளத்தில் பல்வேறு போலி கணக்குகளை தொடங்கி அந்தப் பெண்ணிற்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தார் .மேலும் மணிகண்டன் அந்த பெண்ணை பாலியல் தொழில் செய்வது போல சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். தொடர்ந்து அந்த பெண்ணின் கணவரின் செல்போன் எண்ணையும் பதிவிட்டுள்ளார். மணிகண்டன் அந்த பெண்ணின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது .இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை நேற்று கைது செய்தார் .இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்..