கோவையில் ரவுடி சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட 4 பேர் நீதிமன்றத்தில் சரண்..!

கோவை : மதுரை ஆராப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவுடி சத்தியபாண்டி ( வயது 32) இவர் கோவையில் தங்கி இருந்து கூலிப்படையாக செயல்பட்டு வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு கோவை காந்திபுரம் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் பிஜு என்பவர் கொலை வழக்கில் சத்தியபாண்டிக்கு தொடர்பு இருந்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்த நிலையில் இவருக்கும் மற்றொரு கூலிப்படையை சேர்ந்த சஞ்சய் குமார் என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சத்தியபாண்டி கடந்த 12ஆம் தேதி இரவு கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் ஒரு கும்பலால் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார் .இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சஞ்சய் குமார் தலைமையிலான கும்பல் இந்து கொலையை செய்தது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து தப்பி ஓடிய அந்த கும்பலை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் சஞ்சய் குமார் மற்றும் அவரது கூட்டாளிகளான காஜா உசேன், ஆல்வின், சபூல் கான் ஆகியோர் சரணடைந்தனர். பின்னர் அந்த 4 பேரையும் வேலூர் மத்திய சிறையில் அடைப்பதற்காக காவல்துறை வாகன மூலம் போலீசார் அழைத்துச் சென்றனர் .அந்த வாகனம் அரக்கோணம் சோளிங்கர் சாலையில் உள்ள ராம்தாஸ் நகரில் சென்றபோது திடீரென்று பழுதாகி நின்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த வாகனம் சரி செய்யப்பட்டு வேலூர் சிறைக்குச் சென்றது. அங்கு 4பேரும் அடைக்கப்பட்டனர். இவர்களை போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க கோவை போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.இதற்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.