கருணாநிதி நூற்றாண்டு விழா… வரும் 20ம் தேதி உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்திற்கு அழைப்பு..!

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி 1924-ம் ஆண்டு ஜூன் 3-ம் நாள் திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் பிறந்தார்.

அவரது நூற்றாண்டு விழா வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை சிறப்பாக கொண்டாட திமுக மற்றும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த மாதம் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஜூன் 3-ம் நாள் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன்-3 வரை ஓராண்டு காலம் கலைஞரின் நூற்றாண்டு விழாவை தொண்டர்களின் இல்ல விழாவாக, மக்கள் விழாவாக, கொள்கை விழாவாக, வெற்றி விழாவாக, இந்தியத் திருநாடே திரும்பி பார்க்கும் வகையில் மிகச் சிறப்பாக கொண்டாடுவது என தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் ஜூன் 3 அன்று, தலைமை கழகத்தால் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு திருவாரூரில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. கலைஞர் கோட்டம், அருங்காட்சியகத்தை அகில இந்திய தலைவர்கள் திறந்து வைக்க இருப்பதாகவும், தொடக்க விழா மாநாட்டில், காலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களும், மாலையில் அகில இந்திய தலைவர்களும் உரையாற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மாநாடு இந்திய அளவில் முக்கியத்துவம் பெறும் என எதிர்கார்க்கப்படுகிறது. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், பாஜகவிற்கு எதிராக வலுவான அணியை அமைக்க திமுக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளது. எனவே அதற்கு முன்னோட்டமாக இந்த மாநாடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல்திட்டக் குழுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் வருகிற 20 ஆம் தேதி காலை 10மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.