கர்நாடகத் தேர்தல்: நிராகரிக்கப்பட்டது ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்களின் வேட்பு மனு..!

ர்நாடக சட்டமன்றத்துக்கான பொதுத் தேர்தல் வரும் மே 10-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதன்படி, புலிகேசி நகருக்கு கர்நாடக மாநில அவைத்தலைவர் அன்பரசனை களமிறக்கி விட்டிருக்கிறது எடப்பாடி தரப்பு.

அதேபோல, பன்னீரும் தனது தரப்பில் புலிகேசி நகர் தொகுதிக்கு எம்.நெடுஞ்செழியன், கோலார் தங்கவயல் தொகுதிக்கு அனந்தராஜ், காந்தி நகர் தொகுதிக்கு கே.குமார் என்பவரை நிறுத்தியிருக்கிறார்கள்.

ஆனால், கர்நாடகத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இரட்டை இலைச் சின்னத்தை எடப்பாடிக்கு வழங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி, அன்பரசனும் புலிகேசி நகரில் வேட்புமனுவை அ.தி.மு.க என்ற பெயரில் தாக்கல் செய்திருக்கிறார். இந்த நிலையில், அ.தி.மு.க என்ற பெயரில் பன்னீரின் வேட்பாளர்கள் மூன்று தொகுதியிலும் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கின்றனர். அதன்படி, பன்னீர் தரப்பின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி’ என்பதை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுவிட்டது. அதன்படிதான், கர்நாடகத் தேர்தலில் அவர் தரப்பு வேட்பாளருக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டது. அதன்படி, ஓ.பி.எஸ்-ஸின் வேட்பாளர்கள் தங்களை அ.தி.மு.க வேட்பாளர்கள் என்று சட்டபூர்வமாகக் கூறமுடியாது. ஆனாலும், வேட்புமனுவில் அ.தி.மு.க என குறிப்பிட்டிருப்பதால், அவர்களின் அனைத்து வேட்புமனுக்களும் பரிசீலனையின்போது நிராகரிக்கப்படவே அதிக வாய்ப்பிருக்கிறது” என்றனர்.

இந்த நிலையில், கர்நாடக தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் 3 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதில், புலிகேசி நகர் வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. காந்தி நகர் தொகுதி வேட்பாளர் குமாரின் வேட்பு மனு அதிமுக வேட்பாளர் என ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. கே.ஜி.எஃப் தொகுதி வேட்பாளர் ஆனந்தராஜின் வேட்பு மனு சுயேச்சை வேட்பாளர் என ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது!