கே. மாயத்தேவர் மறைவு: ஓ.பன்னீர்செல்வம் ஆழ்ந்த இரங்கல்..

திரு. மாயத்தேவர் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு முதன்முறையாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கழகம் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிக்கனியை பறித்துக் கொடுத்த கழக முதல் எம்.பி திரு.மாயத்தேவர் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாதது! என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஒருங்கிணைப்பாளரும், கழகப் பொருளாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரான பன்னீர் செல்வம் அறிவிப்பு :

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தினை துவக்கியதற்குப் பிறகு முதன்முறையாக நடைபெற்ற திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் கழகத்தின் சார்பில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு கழகத்திற்கு வெற்றிக்கனியை பறித்துக் கொடுத்தவரும், இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்தவரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியவருமான கே. மாயத்தேவர் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக சின்னாளப்பட்டியில் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

திரு. மாயத்தேவர் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திரு.மாயத்தேவர் அவர்களின் மறைவிற்கு துக்கம் அனுசரிக்கும் விதமாகவும், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இன்று முதல், மூன்று நாட்கள் கழகத்தின் கொடிகள் அனைத்து இடங்களிலும் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது..