இனி ஒரு பட்டனை கிளிக் செய்தால் போதும்… வழக்குகளை தாக்கல் செய்யலாம் – சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட்.!!

சுப்ரீம் கோர்ட்டின் வைர விழா கொண்டாட்டத்தை நேற்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட், வங்கதேசம், நேபாளம், இலங்கை ஆகிய ஆகிய நாடுகளின் தலைமை நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

இந்நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது,

ஒரு பட்டனை கிளிக் செய்வதன் மூலம் வழக்குகளை தாக்கல் செய்யும் வசதி இப்போது எங்களிடம் உள்ளது. இது 24 மணி நேரமும் வழக்குகளைத் தாக்கல் செய்வதை, எளிமையாகவும், வேகமாகவுமாக்கி உள்ளது.

கொரோனா காலத்தில் காணொளி வாயிலாக வழக்கு விசாரணைகள் நடைபெற்றது. நாட்டின் எந்த பகுதியிலும், அல்லது உலகின் எந்தப் பகுதியிலும் அமர்ந்திருக்கும் எந்தவொரு இந்திய வழக்கறிஞரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த நீதிமன்றத்தில் வாதிடலாம். இது சுப்ரீம் கோர்ட்டை அணுகுவதை ஜனநாயகப்படுத்தியுள்ளது. தூரம் காரணமாக சுப்ரீம் கோர்ட்டை அணுக முடியாதவர்களுக்கு இது உதவிகரமாக இருந்தது

மக்கள் அதிக அளவில், சுப்ரீம் கோர்ட்டை அணுகுவது, எவ்வளவு தூரம் வெற்றி பெற்றுள்ளோம் என்பதை காட்டுகிறது. இன்று நமது தேசத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம். சுப்ரீம் கோர்ட் 1950 ஜனவரி 28-ம் தேதி துவங்கப்பட்டது. இவ்வாறு சந்திரசூட் பேசினார்.

இந்த வைர விழா கொண்டாட்டத்தில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், பிரதமர் மோடியை பி.ஆர்.அம்பேத்கரின் சிலையை கொடுத்து வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: சுப்ரீம் கோர்ட் வளாகத்தை விரிவாக்கம் செய்ய 800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் துடிப்பான ஜனநாயகத்தை சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து பலப்படுத்தியுள்ளது. தனிமனித உரிமைகள், பேச்சு சுதந்திரம் குறித்து சுப்ரீம் கோர்ட் பல முக்கியமான தீர்ப்புகளை வழங்கி உள்ளது. மாறிவரும் உலகளாவிய சூழ்நிலையில், ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தியாவை நோக்கி உள்ளது. நமது மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது

ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதியும், முதல் பெண் சுப்ரீம் கோர்ட் நீதிபதியுமான பாத்திமா பீவிக்கு பத்ம பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது பெருமைக்குரியது. நம்பகமான நீதித்துறையை உருவாக்க அரசு தொடர்ந்து செயல்பட்டு பல முடிவுகளை எடுத்து வருகிறது. ஏ.ஐ., தொழில்நுட்பம் உதவியுடன் எனது பேச்சு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு நீங்கள் அதைக் கேட்கிறீர்கள். நீதிமன்றங்களில் தொழில்நுட்பம் இருந்தால், சாமானியர்களின் வாழ்க்கையை எளிதாக்க முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.