கோவையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்வு..!!

கோவை ஆர்.எஸ்.புரத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டிற்கு சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து முல்லை, மல்லிகை பூவும், ஓசூர், பெங்களூரு பகுதிகளில் இருந்து ரோஜா, காக்கடை பூக்களும் வருகிறது. இதுதவிர சேலத்தில் இருந்து அரளி பூவும், நிலக்கோட்டையில் இருந்து குண்டுமல்லியும் விற்பனைக்கு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டில் கோவை மாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மல்லிகை, முல்லை, அரளி, குண்டுமல்லி, ரோஜா, செவ்வந்தி என பூக்களை தேர்வு செய்து வாங்கி செல்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து சற்று குறைவாக உள்ளது. இதனால் பூக்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கார்த்திகை மாதம் என்பதால் கோவில் விசேஷங்கள், திருமண நிகழ்ச்சிகள் என பல்வேறு விழாக்களுக்கு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக மல்லிகை பூக்களின் தேவை அதிகமாக காணப்படுகிறது. ஆனால் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மல்லிகைப்பூ வரத்து குறைவாக உள்ளது. இதனால் விலையும் உயர்ந்துள்ளது. கோவை பூமார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையானது. மற்ற பூக்களும் ஓரளவு விலை உயர்ந்து காணப்பட்டது.

கோவை பூமார்க்கெட்டில் விற்பனையாகும் பூக்களின் விலை நிலவரம் கிலோவில் வருமாறு:- செவ்வந்தி-ரூ.60 முதல் ரூ.120 வரையும், ரோஜா ரூ.120 முதல் ரூ.160 வரையும், கோழிப்பூ-ரூ.40, அரளி-ரூ.200, சம்பங்கி-ரூ.120, வாடாமல்லி-ரூ.80, மரிக்கொழுந்து 1 கட்-ரூ.40, காக்கடைபூ ரூ.400, துளசி-ரூ.40, தாமரை ஒன்று ரூ.15க்கும் விற்பனையாகி வருகிறது.