அண்ணாமலைக்கு குர்ஆன் பரிசளித்த இஸ்லாமிய இளைஞர்… பாதயாத்திரையில் நெகிழ்ச்சி..!

சிவகங்கை: என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு பாதயாத்திரை நடத்தி வரும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இஸ்லாமிய இளைஞர் ஒருவர் திருக் குர் ஆனை பரிசளித்தார்.

கடந்த 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பாதயாத்திரை தொடங்கிய அண்ணாமலை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியவாறு நடைபயணத்தை முடித்துக் கொண்டு, தற்போது சிவகங்கை மாவட்டத்தில் பாதயாத்திரை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் காரைக்குடியில் நடைபயணம் சென்ற அண்ணாமலைக்கு இஸ்லாமிய இளைஞர் ஒருவர் திருக்குர் ஆனை பரிசளித்தார். அதனை ஆர்வமுடன் பெற்றுக்கொண்ட அண்ணாமலை, குர் ஆனை கண்ணில் தொட்டு வணங்கினார். மேலும் அந்த இளைஞரை அழைத்து தன்னுடன் நிறுத்தி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அண்ணாமலைக்கு முஸ்லீம் இளைஞர் குர் ஆன் கொடுத்த போது அங்கிருந்த பாஜகவினர் அந்த இளைஞரை ஏற இறங்க பார்த்தனர். இதேபோல் அண்ணாமலை பாதயாத்திரை நிகழ்வில் பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. மொத்தம் 168 நாட்கள் பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி இரண்டாவது வாரம் சென்னையில் பாதயாத்திரையை நிறைவு செய்கிறார் அண்ணாமலை.

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பொன்.ராதாகிருஷ்ணன் அண்ணாமலையுடன் பாதயாத்திரை நிகழ்வில் பங்கேற்ற நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் ஹெச்.ராஜா அந்த நிகழ்வில் பங்கேற்று வருகிறார். சிவகங்கையை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாமலையுடன் நடைபயணத்தில் பங்கேற்கும் கட்சித் தொண்டர்கள் சோர்வடைந்து விடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு அவ்வப்போது ஸ்நாக்ஸ்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.