தமிழக மாணவர்களின் கனவை கலைத்திருப்பது நியாயமா..? அண்ணாமலை கேள்வி..?

தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பிரகாசிக்கும் கனவுடன் இருந்த பள்ளி மாணவர்களின் கனவுகளைக் கலைத்திருப்பது நியாயமா?என அண்ணாமலை கேள்வி

டெல்லியில் நடைபெறவிருக்கும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தமிழகம் சார்பாக அணியை தேர்வு செய்யாமல், தமிழக பள்ளிக் கல்வித் துறை தமிழக மாணவர்களைப் புறக்கணித்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், ‘டெல்லியில் நடைபெறவிருக்கும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தமிழகம் சார்பாக அணியை தேர்வு செய்யாமல், தமிழக பள்ளிக் கல்வித் துறை தமிழக மாணவர்களைப் புறக்கணித்தது குறித்து, கடந்த ஐந்தாம் தேதி அன்று கேள்வி எழுப்பியிருந்தோம்.

அது குறித்து ஊடகங்களில் செய்தியாக வந்தும், பாஜக தமிழக அரசுக்கு இதுகுறித்து மீண்டும் நினைவூட்டிய பிறகும், இத்தனை நாட்களும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்து விட்டு, இன்று, முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் மீது கண்துடைப்பு நடவடிக்கை எடுத்து, தான் பணியில் இழைத்த தவறை மறைக்கப் பார்க்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் பொறுப்பின்மையை மறைக்க, அரசு அதிகாரிகளைப் பலிகடாவாக்கி, தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பிரகாசிக்கும் கனவுடன் இருந்த பள்ளி மாணவர்களின் கனவுகளைக் கலைத்திருப்பது நியாயமா? பள்ளிக் கல்வித் துறை அமைச்சரே இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.