அரபிக் கடலில் தீவிரமாகும் பைபர்ஜாய் புயல்… வானிலை மையம் எச்சரிக்கை.!!

டெல்லி: அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள அதிதீவிர புயலான பைபர்ஜாய் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இநதிய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அரபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் மையம் கொண்டுள்ள பைபர்ஜாய் புயலானது நேற்று இரவு 11.30 மணிக்கு அதி தீவிர புயலானது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடையும். அது வடக்கு, வடகிழக்கு திசையில் நகரக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பைபர்ஜாய் புயலால் அரபிக் கடலோரத்தில் வலசாட்டில் உள்ள தைத்தல் கடற்கரையில் அலைகள் ஆக்ரோஷமாக வீசும் என எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அந்த கடற்கரை வரும் 14 ஆம் தேதி வரை மூடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் கடற்கரைக்கு யாரும் போக வேண்டாம் என எசச்ரித்துள்ளோம். அது போல் மீனவர்களையும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம். கடலோரத்தில் இருக்கும் கிராமத்தினர் தேவைப்பட்டால் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்படுவர் என தெரிவித்துள்ளார்.

தென் – தென் மேற்கே நிலை கொண்டுள்ள பைபர்ஜாய் புயல், அடுத்த 36 மணி நேரத்தில், வடக்கு-வடகிழக்கு திசையிலும் அதன் பிறகு, அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையிலும் அடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே இந்த புயல் தீவிரமடைந்ததால் கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு பகுதி கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு, கண்ணனூர் மாவட்டங்களுக்கு நேற்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று காலை 08:30 மணி அளவில் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர பைபர்ஜாய் புயல் இன்று காலை 08:30 மணி அளவில் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, கோவாவில் இருந்து மேற்கே சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில், மும்பையில் இருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 820 கிலோமீட்டர் தொலைவில், போர்பந்தரில் (குஜராத்) இருந்து தென்-தென்மேற்கே சுமார் 830 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று, அடுத்த 36மணி நேரத்தில், வடக்கு-வடகிழக்கு திசையிலும் அதன் பிறகு, அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையிலும் அடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும்.

வெப்ப சலனம் காரணமாக, 09.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

10.06.2023 முதல் 12.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

13.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

09.06.2023: தமிழக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும்.

10.06.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

09.06.2023: இலட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 125 முதல் 135 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 160 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதன் பிறகு, இரவு முதல் அதே பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 145 முதல் 155 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 170 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

10.06.2023: இலட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 145 முதல் 155 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 170 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். குஜராத் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.