கோவையில் உட்கட்சி பூசல்… சொந்த கட்சி பிரமுகரை கத்தியால் குத்திய பாஜகவினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு..!!

கோவை: ராமநாதபுரத்தில் உட்கட்சி பூசல் காரணமாக பாஜக நெசவாளர் பிரிவு செயலாளாரை, தாக்கி கத்தியால் குத்திய பாஜக பிரமுகர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை D1 ராமநாதபுரம் காவல் நிலையத்தில் பிஜேபியின் நெசவாளர் பிரிவின் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் ராமநாதபுரத்தில் உள்ள எனது ஸ்டுடியோவில் புகுந்து எங்கள் கட்சியை சேர்ந்த சிலர் கொடூரமாக தாக்கியதாக நேற்று புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த புகாரில்…எங்கள் கட்சியில் உட்கட்சி தேர்தல் நடைபெற போவதாலும் நான் அதில் எந்த பதவிக்கும் போட்டியிடக்கூடாது என்று, என்னை எங்கள் கட்சியை சேர்ந்த கார்த்திக் மற்றும் முத்துக்குட்டி என்பவர்கள் கடந்த மாதம் மார்ச் 30ஆம் தேதி மாலை நான்கு முப்பது மணி அளவில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள எனது ஸ்டுடியோவிற்கு வந்து மிரட்டினார்கள்.

அதற்கு நான் கட்சியில் பதவிக்கு போட்டி இடுவது எனது இஷ்டம் அதனை நீங்கள் எனக்கு சொல்ல வேண்டியது இல்லை என்றேன். அதற்கு கார்த்திக் ,முத்துக்குட்டி மற்றும் பெயர் தெரியாத பார்த்தால் அடையாளம் தெரியக்கூடிய சிலர் சேர்ந்து என் கடைக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து என்னை அடித்தார்கள். கத்தியால் வயிற்றில் குத்தினார்கள்.
மேலும் நான்கு நபர்கள் சேர்ந்து இரும்புக் கம்பியால் அடித்து என் மண்டையை உடைத்தனர்.

பிறகு என்னை வெளியே இழுத்துப்போட்டு கொலை மிரட்டல் விடுத்தனர் என தெரிவித்த ஜெயகுமார் நான் காலதாமதமாக புகார் தெரிவிப்பதற்கு காரணம் என் உடல்நிலை தற்போது தான் தேறி உள்ளது என்றார்.மேலும் புகார்தாரர் ஜெயக்குமார் ஸ்டுடியோவிற்குள் புகுந்து தாக்குதல் நடத்துவது தொடர்பான சிசிடிவி காட்சியையும் காவல் நிலைத்தில் ஒப்படைத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக d1 ராமநாதபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பாஜக நிர்வாகியை பாஜகவினரே தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சம்பவம் தொடர்பாக ஜெயக்குமார் அளித்த புகார் அடிப்படையில் கார்த்திக், முத்துகுட்டி உள்ளிட்ட 4 பேர் மீது ராமநாதபுரம் போலீசார் 7 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர்.